Tuesday, September 30, 2008

இரா உருவான கதை

ஜூன் 6ஆம் தேதி எங்கள் குழு வேலூரில் ஹரி வீட்டு கிரஹப்பிரவேசத்திற்காக சென்றிருந்தோம். அன்றுதான் தசாவதாரம் ரிலீஸ். சென்னைக்கு வரும் வரை பொறுமையில்லை அதனால் அங்கேயே Adlabs Lakshmi Theatreல் அரும்பாடுபட்டு படம் பார்த்துவிட்டு சென்னைக்கு

திரும்பியிருந்தோம். மறுநாள் கம்ப்ளீட் ரெஸ்ட். அதற்கு அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரியை நான் (ஹரீஷ்) அவரது எடிட்டிங் ஸ்டூடியோவில் சந்திக்க சென்றிருந்தேன். அப்போது நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கும்போது, View-Pointல் ஒரு படம் செய்தால் எப்படியிருக்கும் என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதுவும் அது ஒரு பேய் வீட்டில் தன்னந்தனியாக ஒரு video game effectல் செய்யும்போது பார்ப்பவர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பற்றி எதேச்சையாக பேசப்போக தோன்றிய கதைதான் இரா... அட! இது நல்லாயிருக்கே என்று சொன்ன ஹரி இதை நானே தயாரிக்கிறேன் என்று கூற, நான் கேட்டது 'நெசம்மாத்தான் சொல்றீங்களா ஹரி?' என்று (அப்பாவியாக 'கற்றது தமிழ்' ஹீரோயின் தொணியில்) கேட்டது இன்னிக்கும் மறக்க முடியாது.



எங்கள் கேமராமேன் சதீஷ் - கமல் ரசிகர்

மறுநாள் காலையில் ஹரிக்கு ஃபோன் செய்து ஒரு கன்ஃபர்மேஷனும் செய்துக்கொண்டேன்.... சரி, இவரு சீரியஸாதான் சொல்றாரு என்று தெரிந்து கொண்ட பின் குழுவைக்கூட்டினோம். அதாங்க Meeting...சேகர் சாரும் வந்து சேர்ந்தார்... என்னை மாதிரியே அவரும் ஆச்சர்யப்பட்டு அங்கே மறுபடியும் ஒரு 'நெஜமாத்தான் சொல்றியா' எனும் குரல் கேட்டது.


அடுத்ததாக எங்கள் குழுவின் மூன்றாவது கண்(அதாங்க கேமராமேன்) அவரிடம் விஷயத்தை கூறினோம், சற்றே வெட்கப்பட்டார், கோவப்பட்டார்... ஏன்னா அவருதான் இந்தப் படத்துல ஹீரோ... பெரிய கேமராமேனா வரணும்ங்கிற லட்சியத்துல இருக்கிற ஒருத்தரை கூப்பிட்டு நீங்கதான் ஹீரோன்னா டென்ஷன் ஆவாரா மாட்டாரா...?
ஒருவழியா ப்ராஜெக்ட் மேக்கிங் புதுசா இருக்குன்னு சொல்லி அவரை சம்மதிக்க வச்சோம்....


ஜூன் 18, 2008 புதன்கிழமை, கொளத்தூர் அகத்தீஸ்ரர் கோயிலில் பூஜை போட்டு படவேலைகளை துவக்கினோம். மறுநாளிலிருந்து மும்முரமாக கதை விவாதம் தொடங்கியது, ஸ்கிரிப்ட் முடிக்க 12 நாட்களானது. முதல் கட்ட படப்பிடிப்பிற்காக நாங்கள் ஜூலை 2ஆம் தேதி 7 மணிக்கு அலுவலக பூஜை போட்டுவிட்டு மூணாறு கிளம்பினோம்.

இரா என்றால் என்ன?

முதலில் இந்த படத்திற்கு நாங்கள் 'ஓர் இரவு' என்ற தலைப்பையே வைத்திருந்தோம். ஆனால் அந்த தலைப்பு 1951 ஏ.வி.எம் தயாரிப்பில் அண்ணாவின் கைவண்ணத்தில் திரைப்படமாக வெளிவந்தது. ஆகையால் எங்களுக்கு இந்த தலைப்பு கிடைப்பதில் சில தாமதங்கள்(சிரமங்கள்) ஏற்பட்டது. சரி, முதல் படம், எதற்கு பிரச்சினை என்ற எண்ணத்தில், நாங்கள் இதற்கு வேறு தலைப்பை தேட முடிவெடுத்தோம். ஆனால் ஓர் இரவு அளவிற்கு வேறோரு தலைப்பு கிடைப்பதாயில்லை... கடைசியில் சிகாகோவின் வலைதள அகராதி (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:603.tamillex) ஒன்றை அலசிக்கொண்டிருக்கும்போது கிடைத்த தலைப்புதான் இரா... இரா என்றால் இரவுதான்... (இராப்பாடகன், இராப்பனிக்காலம், இராப்பிச்சை என்ற வார்த்தையில் இருப்பது போல்)
ஒருவழியாக, இந்த தலைப்பு கிடைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

அன்புள்ள வலைநண்பர்களுக்கு,

இந்த வலைப்பதிவின்மூலம் உங்களை சந்திப்பதில் நாங்கள் (ஹரிஷங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்) பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்தப்படத்தைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தற்போதைய நிலவரங்களையும் உங்களுக்கு தெரிவிப்பதோடு, உங்களது மேலான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பை இந்த வலைப்பதிவு தரும் என்ற நம்பிக்கையுடன் இதோ எங்கள் முதல் பதிப்பு....