Tuesday, April 28, 2009

பத்ததிரிகைகளில் 'இரா'

பத்திரிகைகளில் வெளியான 'இரா' படத்தைப் பற்றிய செய்திகளில் சில இதோ உங்களுக்காக...

நக்கீரன்


தினமணி


Womens Era


சினிமா எக்ஸ்பிரஸ்


இந்தியா டுடே


டைம்ஸ் ஆஃப் இந்தியா


மாலை மலர்


ஆந்திர ஜோதி


இந்தியன் எக்ஸ்பிரஸ்

Tuesday, April 21, 2009

ப்ரஸ்மீட்



ஒரு வழியாக நாங்கள் நினைத்ததுபோல் இறந்த ஆன்மாவிடமிருந்து பாடல் வரிகள் எங்களுக்கு கிடைத்தது.

இந்த பாடல்வரிகளை எங்களது பாடல் இசையமைப்பாளர் சதீஷிடம் காட்டிய போது அவர் இந்த பாடலில் இருக்கும் தாளக்கட்டானது மிகவும் எளிதாக பாடல் வடிவமைக்க உதவுவதாகவும். மிகவும் அனுபவமுள்ள ஒரு பாடலாசிரியர் எழுதியதுபோல் இருக்கிறது என்றும் கூறி மகிழ்ந்தார்.
எங்கள் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, 4ஃப்ரேம்ஸ் தியேட்டரில் அக்டோபர் 22ஆம் தேதி நடந்தேறியது.



படத்தின் ஒரு டீஸர் டிரெய்லரையும், படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் போட்டு காட்டி சில தகவல்களை பத்திரிகை நண்பர்களுடன் பரிமாறிக் கொண்டோம். இந்த வலைப்பூவை ரெகுலராக படித்து வருபவர்களுக்கு அந்த தகவல்கள் ஒன்றும் புதுமையாக இராது, இருப்பினும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
* தமிழ் திரையுலகில் முதன்முறையாக மூன்று பேர் சேர்ந்து இயக்கிய படம்
* முழுக்க முழுக்க H.D. formatல் எடுக்கப்பட்ட படம்
* கதையின் முக்கிய காட்சிகளை மூணாறு மலைப்பகுதியில் உண்மையாக ஆவிகள் பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் பகுதியில் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது
* கத்தி, இரத்தம், அகோர உருவங்கள், காட்சியமைப்புகளில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், கதாநாயகன், கதாநாயகி, பாடல், சண்டை, இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற வழக்கமான சினிமா ஃபார்மூலாவிலிருந்து சற்றே விலகி எடுக்கப்பட்ட முதல் திகில் படம்
* Paranormal Investigation எனப்படும் அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் என்ற புது professionஐ தமிழ் திரையில் அறிமுகப்படுத்தியுள்ள படம்.
* இப்படத்தில் நடிகர்கள், டெக்னிஷியன்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர் உட்பட அனைவரும் புதுமுகங்கள்
* ஆவிகள், பேய்கள் உண்டா இல்லையா? என்ற கேள்விக்கு 'உண்டு', 'இல்லை' என்றற கூறும் இருதரப்பினரும் பார்க்க வேண்டிய படம்.



இதையெல்லாம் கூறிமுடிக்கும் வரை பத்திரிகை நண்பர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றையும்விட கண்ணதாசன் ஐயா அவர்களின் புண்ணிய ஆன்மாவை அழைத்து எழுதப்பட்ட பாடல் இதுதான் என்று பாடல்வரிகளை வெளியிட்டதும், அந்த வரிகளைப் பற்றியும் அந்த பாடலை நாங்கள் பெற்ற விதத்தை பற்றியும் எக்கச்சக்க கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகவும் விளக்கமாகவும் பதிலளித்து முடித்தோம்.
அடுத்த 2 நாட்களுக்கெல்லாம், இந்த செய்தி கிட்டத்தட்ட எல்லா நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், இணைய குழுமங்களிலும் சரமாரியாக பிரசுரிக்கப்பட்டன.

பத்திரிகைகளில் பிரசுரமான சில ஃபோட்டோக்களை அடுத்த போஸ்ட்டில் போடுகிறேன்.

Saturday, April 18, 2009

பொக்கிஷம்

ஒரு SMS படித்த ஞாபகம்.

ஒரு கிராமத்தில் மழையே இல்லாததால் அந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சம்பிரதாயப்படி அந்த பூஜையின் முடிவில் மழை வர வேண்டுமாம். அந்த கிராம மக்கள் அனைவரும் மழை வரும் என்ற நம்பிக்கையில் அந்த பூஜை நடத்தினார்கள். ஆனால், அந்த பூஜைக்கு வந்த ஒரு குழந்தை மட்டும் கையில் குடையுடன் வந்ததாம்.

இந்த SMS-ல் வந்த குழந்தையைப் போல் எங்கள் குழு பாடல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திரு. இரத்தினசாமி ஐயா அவர்களுக்கு சால்வை, சந்தனமாலை என்று தயாராக சென்றோம். எங்களுக்கு அவர் பேரில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது. எந்த ஒரு விஷயத்தையும் நம்புவுதாக இருந்தால் முழுமையாக நம்பிக்கை வைக்கவேண்டும், அறைகுறை நம்பிக்கை எப்போதும் உதவாது.

ஆனால், ஊர் இவரை நாளை சந்தேகப்படக்கூடும் என்ற ஒரு விஷயம்தான் எங்களை கவலைப்படவைத்தது. அதனால், ஊருக்கு இவர் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒரு யுக்தியை கையாண்டோம்.

அது என்னவென்றால், நாங்கள் திரு. இரத்தினசாமி ஐயாவை சந்திக்க சென்றோம், அன்னதானம் முடிந்தது என்று கூறினோம், மகிழ்ந்தார், மீண்டும் கவியரசரின் ஆன்மாவை அழைக்க கண்களை மூடினார்.

ஆவலுடன் நாங்கள்
அப்போது, அவரிடம் 'பாடல் பெறுவதற்கு முன் ஒரு சின்ன திருத்தம் செய்ய வேண்டும்' என்று கூறினோம்.

'என்ன?' என்று கேட்டார்.

'எங்களுக்கு நேற்றைய நாயகன் என்ற பாடல் வேண்டாம், அதற்கு பதிலாக இரவின் பயங்கம்' என்ற தலைப்பில் பாடல் வேண்டும்' என்று பாடலின் தலைப்பை மாற்றிக் கூறினோம்.

அவர் மௌனமாக சிரித்தார். கண்டிப்பாக நாங்கள் அவரை சோதித்து பார்க்கிறோம் என்று அவர் யூகித்திருக்க வேண்டும். ஆனால், அது ஊருக்காக, எங்களுக்காக அல்ல என்பதை பலமுறை அவருக்கு உணர்த்த முயன்று(கொண்டு) இருக்கிறோம்.

சிரித்துவிட்டு 'சரி' என்று கூறி கண்களை மூடினார், ஒரு நிமிடம் இருக்கும் பிறகு கண்களை திறந்து தனது பேட்-ஐ எடுத்து சரசரவென்று ஏதோ கிறுக்கினார். ஒரு 2 நிமிடம்தானிருக்கும். முடிந்தது.

அந்த பேப்பரை எங்களிடம் நீட்டினார், எழுத பழகும் ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போலிருந்தது.

'இதுதான் பாடல்' என்றார்.

நாங்கள் எழுத்துக்கள் புரியவில்லை என்று அவரிடம் கண்களால் சொன்னோம். மீண்டும் அந்த பேப்பரை வாங்கி அவரே படித்துக் காட்ட ஆரம்பித்தார். அதில் கவியரசரின் வாழ்த்துக்கள் இருந்தது. பிறகு பின்வரும் பாடல் இருந்தது.


மெய்யோடு பொய்யாக
ஊர்தூங்கும் நேரம்...
இருளோடு ஒளியிங்கு
போர் செய்யும் காலம்...
கோட்டானும் சாத்தானும்
இரைதேடும் ஜாமம்...
இருந்தாலும் இறந்தாலும்
பொல்லாது ஏமம்...

ஆகாயம் இருள்கொண்டு
நிறம் மாறிப் போகும்..
நிழல்கூட நிஜம் என்று
மனமிங்கு வாடும்..
ஆன்மாக்கள் குடியேற
கூடொன்றைத் தேடும்..
எதைத்தேடி அலைந்தாலும்
ஆட்கொள்ளும் ஏமம்...

இந்த பாடலை அவர் படித்து காட்டியபின் நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் இந்த பாடலை விமர்சிக்க அருகதை அற்றவர்கள் என்று எண்ணி... பாடலை இரசித்தோம்... ஆழ இரசித்தோம்... மழை வந்தது. குடை கொண்டு வந்த எங்களது நம்பிக்கை வீண்போகவில்லை, குடையை விரித்தோம். மாலை சூட்டினோம், சால்வை போர்த்தினோம், ஆராவாரமாக கொண்டாடினோம்.

மழையில் நனைந்தபடி நாங்கள்

எங்கள் படத்திற்கு பொக்கிஷமாக கவியரசரின் பாடல் கிடைத்தது எண்ணி நாங்கள் பெருமைப்பட்டுக் கொண்டோம்.

இந்த பாடல்வரிகளை எங்களது பாடல் இசையமைப்பாளர் சதீஷிடம் காட்டிய போது அவர் கூறிய விஷயம் எங்களை மேலும் ஆச்சர்யப்படுத்தியது....

Sunday, April 12, 2009

புது முயற்சி

நாங்கள் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சியை பற்றி கூறுவதாக சென்ற ப்ளாக்கில் கூறியிருந்தேன். அது என்னவென்றால், நாங்கள் திரு. இரத்தினசாமி ஐயா அவர்களை பேட்டி கண்ட போது, அவர் கூறிய ஒரு விஷயம், 'இறந்து போன ஆன்மாக்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற முடியும்' என்று கூறியிருந்தார். இந்த நேரத்தில் நாங்கள் படத்திற்காக ஒரு சவுண்ட்ராக் பாடலை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தோம். அந்த பாடலின் தலைப்பு 'நேற்றைய நாயகன்', இந்த தலைப்பின்படி இறந்து போன ஒரு ஆன்மா தனது நிலையைப் பற்றி விளக்கி கூறுவதுபோல் இருக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். இதற்காக நாங்கள் புதுமுக பாடலாசிரியர்களை தேடிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு வந்த வரிகள் திருப்தியாக இல்லை.

வரிகள் ஆழமாகவும் இறந்தவன் நிலையை தெளிவாக விளக்கும் விதமாகவும் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் எதிர்ப்பார்திருந்தோம். அப்போது ஒரு அறிமுக பாடலாசிரியர் (பெயர் குறிப்பிடவிரும்பவில்லை) 'இதுக்கு மேலயும் வரிகள் வேணும்னா நான் இறந்துபாத்துதான் எழுதணும்' என்று கூறி சென்றுவிட்டார். அவர் சென்றதும் நாங்கள் புலம்பிக் கொண்டிருந்தோம். அந்த பாடலாசிரியர கோபமாக பேசியது நியாயமோ, நம்மீதுதான் தவறு உள்ளதோ, அதிகமாக எதிர்பார்க்கிறோமோ என்று புலம்பிக்கொண்டிருந்தோம். அப்போது கேமிராமேன் சதீஷ் ஒரு பயங்கர ஐடியா கொடுத்தார், அந்த பாடலாசிரியர் இறந்து பார்த்து பாடல் எழுதவேண்டாம், அதற்கு பதிலாக திரு. இரத்தினசாமி ஐயாவிடம் சென்று இறந்து போன ஒரு கவிஞரின் ஆன்மாவை அழைத்து பாடல் எழுத வைப்போம் என்று கூறினார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எனக்குள் இது ரொம்ப நல்ல ஐடியா என்றும் இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டுமே என்று இருந்தது. நான் நினைத்தது சரிதான், அனைவரும் சதீஷுக்கு கை கொடுக்க ஆரம்பித்தனர். நல்ல ஐடியா என்று பாராட்டினர்.

சரி என்று அடுத்த நாளே திரு. இரத்தினசாமி ஐயாவிடம் சென்றோம். கேமிரா சகிதம் அவரை சந்தித்து விஷயத்தை கூறினோம். அவர் நினைத்திருப்பார், 'இவங்க என்னடா ஆ..ஊ..ன்னா கேமிராவை தூக்கிட்டு வந்துடுறாங்க..' என்றும் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் விஷயத்தை கூறியதும், அவர் சர்வ சாதாரணமாக, அவ்வளவுதானே நல்ல விஷயம்தான் பண்ணிடலாம் என்றார். எந்த கவிஞருடைய ஆன்மாவை அழைக்கவேண்டும் என்று அவர் கேட்டதற்கு, கவியரசரின் ஆன்மாவை அழைத்து பாடலெழுதிக் கேட்க வேண்டும் என்று கூறினோம். சரி செய்துவிடலாம் என்று கூறிய அவர் என்ன பாடல் வேண்டும் என்று கேட்டார், நாங்கள் பாடலின் தலைப்பான நேற்றைய நாயகன் என்று கூறி அவரிடம் பாடல் எவ்வித்ததில் இருத்தல் வேண்டும் என்று விளக்கினோம். அவர் பாடல் பெற்றுத்தருவதாக சம்மதித்தார். மேலும் அவர், 'நான் சம்மதிப்பது பெரிதல்ல, அதற்கு கவியரசரின் ஆன்மா சம்மதிக்க வேண்டும்' என்று கூறினார். இது எங்களை சற்றே கலவரப்படுத்தியது. ஒருவேளை அவரது ஆன்மா பாடல் எழுதிக் கொடுக்க மறுத்து விடுமோ என்று பயந்தோம்.

இரத்தினசாமி ஐயா ஆட்டோரைட்டிங் எழுதுவது

அவர் தனது பேட்-ஐ எடுத்து ஆட்டோரைட்டிங் முறையில் தனது வழிகாட்டும் குரு ஆவியை அழைத்து விஷயத்தை கூறினார், அதன்பிறகு தனது பேடில் ஏதேதோ எழுத்துக்களை கிறுக்கினார், பிறகு அதை படித்துப் பார்த்துவிட்டு எங்களிடம், 'கவிஞர் சன்மானம் கேட்கிறார்' என்று கூறினார்.

எங்களுக்குள் என்னென்னவோ தோன்றியது, அதெப்படி இறந்துபோனவர் சன்மானம் கேட்க முடியும் என்று ஏதேதோ எண்ணங்கள்.

பிறகு அவர் அந்த கிறுக்கல்களை எங்களுக்கு படித்துக் காட்டினார்.

அதில் 'இளம் தலைமுறையினரே... கலை ஆர்வலர்களே... வாழ்த்துகிறேன் உங்களை...' என்று சில விஷயங்கள் இருந்தது. அதன்படி கவியரசரின் ஆன்மா எங்களிடம் சன்மானம் வாங்காமல் பாட்டு எழுதி கொடுப்பதில்லை என்றும், சன்மானம் என்னவென்றால், உடலால் இயலாத ஏழு உடல் ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு மீண்டும் வந்து என்னை சந்திக்க நான் பாடல் எழுதிக்கொடுப்பேன் என்று கூறியிருப்பதாக அந்த வரிகள் இருந்தது.

இது நல்ல விஷயம்தானே என்று எண்ணி நாங்கள் அதை உடனடியாக நிறைவேற்றிவிட்டு வருகிறோம் என்று கிளம்பினோம். அடுத்த நாளே நிறைவேற்றிவிட்டோம். இதற்குள் இந்த விஷயம் எங்கள் அஸிஸ்டெண்டுகள் மத்தியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, இதெல்லாம் நடக்கிற காரியமில்லை என்றும் அந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் உங்களை ஏமாற்றுகிறார் என்றும், பாடலை எழுத அவகாசம் தேடிக்கொள்ளவே இப்படி அன்னதானம் அது இது என்று கூறியிருக்கிறார் என்றும் அவர் இரவோடு இரவாக ஒரு பாடலை நேற்றைய நாயகன் என்ற தலைப்பில் எழுதி மனப்பாடம் செய்து கொண்டு மறுநாள் கவியரசரின் ஆன்மா எழுதியது போல் எழுதிக்கொடுக்க போகிறார் என்று ஆளாளுக்கு ஒருவிதமாக பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த ஐயம் உண்மையில் நாளை அனைவருக்கும் வரக்கூடும். இதை சரிபார்த்துக்கொள்ள நாங்கள் ஒரு யுக்தியை கையாண்டோம்.

அது...

Friday, March 13, 2009

மாமனிதரின் உதவி

திரு. சி. எம். இரத்தினசாமி
போஸ்ட் புரொடக்ஷன் காரணமாக இந்த ப்ளாக்கை ரெகுலராக எழுத முடியாததற்கு மன்னிக்கவும்.

நாங்கள் சென்னைக்கு வந்தவரை கூறியிருந்தேன். சென்னையில் நாங்கள் வந்ததும், மூணாறில் ஷூட் செய்த காட்சிகளை எடிட்டிங்கிற்காக ஏற்றிவிட்டு, ஒரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டோம். அது என்ன என்று கூறுவதற்கு முன்னால், இந்த படத்திற்க்காக நாங்கள் சந்தித்த முக்கியமான ஒரு நபரைப் பற்றி நான் சொல்ல வேண்டும்.

எங்கள் படத்திற்க்காக சில அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு ஒரு ஆவியுலக ஆராய்ச்சியாளரின் விளக்கம் தேவைப்பட்டது. அதற்க்காக நாங்கள் சந்தித்தது திரு. சி. எம். இரத்தினசாமி ஐயா அவர்களை. இவர் இனிஷியலில் இருக்கும் கம்பீரம் இவரை நேரில் பார்ப்பதிலும் இருக்கிறது. நம்மூரில் இவர் போல் உள்ளவர்கள் மிக சிலரே, உதாரணத்திற்கு திரு. விக்கிரவாண்டி இரவிச்சந்திரன் ஐயா அவர்களை கூறலாம். விக்கிரவாண்டி ஐயா அவர்களின் புத்தகங்களும் அவரது சேவைகளும் மிகவும் பிரசித்தம், குறிப்பாக இவர் நடத்தும் ஆவிகள் உலகம் ஒரு புதுமையான இதழ். இவரைப் போலவே இரத்தினசாமி ஐயா அவர்களும் இந்த துறையில் செயற்கறிய செயல்களை செய்து வருகிறார்.

சேகர் சார் (கிருஷ்ண சேகர்) கோயம்புத்தூரில் இருக்கும்போது இரத்தினசாமி ஐயா அவர்களைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறார். இவர் பல தடங்கள்கலையும் மீறி இந்த துறையில் நுழைந்த அந்த ஆர்வம், மேலும் இவர் சிறுவயதில் ஒரு குழு அமைத்து மேற்கொண்ட அமானுஷ்ய ஆராய்ச்சிகள் இப்படி பல விஷயத்தை சேகர் சார் கூறினார், அதனால் நாங்கள் அம்பத்தூர் கனரா பாங்கிற்கு அருகில் இவரது திருமுருகன் ஆன்மீக மையத்தில் இவரை சந்தித்தோம். எங்களுக்கு ஆவிகள் பேய்கள் பற்றி இருந்த கண்ணோட்டத்தை பகிர்ந்து தெளிந்துக் கொண்டோம். இவரிடம் நாங்கள் சந்தித்து பேசிய தருணங்கள் எங்கள் திரைப்படத்தை நல்ல முறையில் நேர்த்தி செய்ய மிகவும் உதவியது. அவருக்கு எங்கள் குழு சார்பாக, இந்த வலைப்பூவின் வாயிலாக(வும்) நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவரை சந்தித்ததன் மூலம் எங்கள் படத்திற்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. அந்த பொக்கிஷம் என்ன என்று அடுத்த போஸ்ட்டில் கூறுகிறேன்.