Tuesday, November 11, 2008

பேக்-அப்

கடைசி நாள் இரவு ஷூட்டிங் மிகவும் கோலகலமாக நடந்து கொண்டிருந்தது. அதற்கு காரணம், இன்று இரவு ஷூட்டிங் முடிந்து விட்டால் இந்த பயங்கர வீட்டை விட்டு போய் விடலாம் என்ற ஒரு குட்டி சந்தோஷம் எனக்கு இருந்தது, கண்டிப்பாக இது அனைவருக்கும் இருந்திருக்க வேண்டும்.

எங்கள் ஷூட்டிங் நடப்பதற்கு சற்றே அப்பால் 'வர்ணம்' என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த திரைப்பட குழுவின் தயாரிப்பு மேற்பார்வையாளர் திரு.ராஜேந்திரன், எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து எங்களை சந்தித்து பாராட்டி விட்டு சென்றார்... அவர் வார்த்தைகள் எங்களுக்கு பூஸ்ட்டாக இருந்தது. இரு குழுவினரும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டோம்.

விடிந்தது, ஷூட்டிங் முடிந்தது, எல்லா லைட்டுகளையும் கழற்றி, உடமைகள் அனைத்தையும் சரி பார்த்து, கிளம்புவதற்குள் மணி ஒரு 10.00 இருக்கும். அந்த வீட்டிற்கும், நடிகர்களுக்கும் பூசணி உடைத்து, ஒரு குட்டி பூஜை ஒன்று போட்டுவிட்டு கிளம்புவதற்காக அந்த வீட்டை விட்டு வெளியே பேக்-அப் வண்டியிடம் குழுமியிருக்கும்போது, அந்த வீட்டிற்கு அருகே இருந்த டீ எஸ்டேட்டிலிருந்து இருவர் எங்களிடம் பேச்சு கொடுத்தனர்.

'இவ்வளவு நாளா இந்த வீட்லியா ஷூட்டிங் பண்ணிட்டிருந்தீங்க... யாருக்கும் எதுவும் ஆகலியா?' என்று அவர்கள் பேச்சை ஆரம்பித்தது எங்களுக்கு கலவரமாக இருந்தது. ஏன்? என்று கேட்டதற்கு, வழக்கம் போல் அந்த வீட்டில் நடந்த பயங்கர சம்பவங்களை கூற ஆரம்பித்தனர். அவர்கள் கூறக்கூற அவர்கள் கேட்ட கேள்வி எவ்வளவு யதார்த்தமானது என்று தெரிந்தது. உண்மையிலேயே தப்பி பிழைத்துவிட்டோம் என்ற பெருமிதம்தான் இருந்தது. மேலும், அந்த வீட்டிற்கு சற்று அருகில் இருக்கும் குடிசையில் ஒரு பாட்டி இருந்தார், அவரை சந்தித்து விடைபெற்ற போது, அவர் கண்கலங்கி 'இந்த ஏரியாவுக்கு எத்தனையோ வெளியூர்காரங்க வந்துருக்காங்க, நீங்கதான் சல்லியம் இல்லாம நிம்மதியா கிளம்புறீங்க' என்று வாழ்த்தி வழியனுப்பினார்

ஷூட்டிங் முடிந்துவிட்ட சந்தோஷம் இருந்தாலும், மூணாறில் நாங்கள் வாழ்ந்த இடங்கள் (அந்த வீட்டையும் சேர்த்து), பழகிய நண்பர்கள், சாப்பிட்ட ஹோட்டல், லொகேஷன் தேடி தேடி அலைந்த மலைப்பாதைகள், இது எல்லாத்தையும் விட்டு விட்டு வீட்டிற்கு போவதற்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.

பிரியாவிடை கொடுத்த திரு. நிக்ஸன் வலப்பக்கத்தில் முதலாவதாக நிற்பவர்

ஹோட்டலில் எங்களை உபசரித்த  அழகர்சாமி

வரும்வழியில் பனிமலையில்

அருகில் இருந்த ஓரிரண்டு பேர்களை சந்தித்து விடைபெற்றோம், அவர்களும் எங்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். அழுதுகொண்டே பள்ளிக்கு போகும் குழந்தையைப்போல் நாங்கள் மூணாறைவிட்டு சென்னை திரும்பினோம்.

மூணாறிலுள்ள முருகர் கோவில்

பழனியில் இரா டீம்

கிளம்புவதற்கு முன், ஷூட்டிங் வெற்றிகரமாக நடந்தேறியதற்காக மூணாறு முருகன் கோயிலில் ஒரு விசேஷ பூஜை போட்டுவிட்டு, பிள்ளையாருக்கு 108 தேங்காய்களை உடைத்துவிட்டு, வரும் வழியில் பழனியாண்டவரையும் தரிசித்துவிட்டு சென்னை வந்தடைந்தோம்... என்னடா இது! பேய் படம் எடுத்துட்டு இத்தனை கோயில் குளங்களை சுத்திட்டு வர்றீங்களே என்று நீங்கள் நினைக்கலாம்... பேய் படமா இருந்தா என்ன...? செய்யும் தொழிலே தெய்வமில்லியா...!

புழுமிகு சென்னை

மீண்டும் CHENNAI

No comments: